Wednesday, February 1, 2012

வாயைத் திற... வாசம் வரும்! துர்நாற்றத்தைத் துரத்த சூப்பர் டிப்ஸ்

வாய் மணக்கப் பேசுவதற்காகத் தாம்பூலம் தரிக்கும் வழக்கத்தையே உருவாக்கியவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று நம்மில் பலரைப் படுத்தி எடுக்கும் பிரச்னைகளில் முக்கியமானது... வாய் துர்நாற்றம்!

 யாரிடமும் சகஜமாகப் பேச முடியாது. யாருடனும் நெருங்கிப் பழக முடியாது. குற்ற உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் தலை தூக்கும். வெளிநாடுகளில், இந்தப் பிரச்னை விவாகரத்துவரைகூட போவது உண்டு. வாய் துர்நாற்றத்தைத் தவிர்த்து மணக்க மணக்கப் பேசுவது எப்படி என்பதுபற்றி இங்கே பேசுகிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

பல் மருத்துவர் யஷ்வந்த்: ''வாய் துர்நாற்றத்தை (Bad Breath ) 'ஹாலிடோஸிஸ்' (Halitosis) என்று குறிப்பிடுவர். சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, சாப்பிட்ட பின் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைதான் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம். நாம் சாப்பிடும்போது பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும் உணவுத் துகள்கள் வாய் கொப்பளிக்கும்போதோ அல்லது பல் துலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால், அழுகிப்போய் கெட்ட வாடை வீசத் தொடங்கும். அந்த உணவுத் துகள்களில் கந்தகம் (சல்பர்) உருவாவதுதான் துர்நாற்றத்துக்குக் காரணம். பல் சொத்தை இருந்தாலும் இந்த நாற்றம் ஏற்படும்.

தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர். இரண்டுமே தவறான விஷயங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது. மிதமான அழுத்தம் கொடுத்து (படத்தில் காட்டியிருப்பது மாதிரி) குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும். ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. அதில் உள்ள சிலிக்கா பவுடர், பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.

தினமும் ஃபிளாஸ்ஸிங் (Flossing) முறை மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அகற்றலாம். அதாவது, இரண்டு பற்களுக்கும் இடையில் (படத்தில் காட்டி இருப்பதுபோல) நூலைச் செலுத்தி மேலும் கீழுமாக இழுக்கும்போது, அங்கு உள்ள உணவுத் துகள்கள் வெளியேறிவிடும். எல்லாவிதமான நூலையும் இதற்குப் பயன்படுத்த முடியாது. இதற்கெனவே பிரத்யேகமாக உள்ள டெண்டல் ஃபிளாஸ் (Dental Floss) என்ற நூலை மட்டுமே பயன்படுத்தி பிளாஸ்ஸிங் செய்ய வேண்டும். தரமான மவுத் வாஷைப் பயன்படுத்தியும் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.  

சில நேரங்களில் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டாலும் துர்நாற்றம் ஏற்படலாம். தொற்று ஏற்பட்டு புண் உருவாகும்போது, அதில் உள்ள சீழ் நாற்றத்தை ஏற்படுத்தும். வருடத்துக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னை வராமல் தவிர்க்க முடியும்.''


இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களுக்கான மருத்துவத்தின் துறைத் தலைவர் (சென்னை மருத்துவக் கல்லூரி) சந்திரமோகன்:

''உணவுக் குழாயில் நோய்த் தொற்று ஏற்படும்போது துர்நாற்றம் உண்டாகலாம். உணவுக் குழாயும் இரைப்பையும் சேரும் இடத்தில் சுருக்குத் தசை இருக்கும். இந்தத் தசை இறுக்கமாக இல்லாமல், தளர்வாக இருந்தால், இரைப்பையில் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்கு வரும். இப்படி வருவதை நெஞ்சு எரிச்சல் என்பர். இதுபோல் நெஞ்சு எரிச்சல் வரும்போது வாய் துர்நாற்றம் ஏற்படும்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, புகை மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் அல்லது வயிறு முட்டச் சாப்பிடுபவர்களுக்கு சுருக்குத் தசை தளர்வாக இருக்கும்.

மசாலா நிறைந்த உணவுகள் மற்றும் வறுத்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடும்போது, ஜீரணம் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும். நீண்ட நேரம் வயிற்றுக்குள் மசாலாப் பொருட்கள் இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படலாம். பொதுவாக, இரைப்பையில் இருந்து உணவு முன் குடலுக்குப் போக இரண்டரை முதல் நான்கு மணி நேரம் ஆகும். இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு முன் குடலுக்குப் போகாமல் இரைப்பையிலேயே இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். குறிப்பிட்ட நேரத்துக்குள் முன் குடலுக்குள் உணவு போகாமல் இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரைப்பையில் இருந்து உணவைத் தள்ளும் வேகம் குறைவாக இருக்கும். அதேபோல, இரைப்பைக்கும் முன் குடலுக்கும் இடையே குடல் புண் அல்லது கட்டி இருந்தாலும், உணவு செல்லும் வேகம் குறைவாக இருக்கும். எனவே, புண் அல்லது கட்டி இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், மருத்துவரைக் கலந்து ஆலோசித்து எண்டாஸ்கோப்பி சோதனை செய்துகொள்வது அவசியம்.''

''அஜீரணம், அதிக அமிலத்தன்மை, அதிகப் பித்தம்  ஆகியவை வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள். இதைப் போக்க சீரகத்தைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்தலாம். பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய்ப் புண் ஆகியவற்றாலும் துர்நாற்றம் ஏற்படலாம். இவை ஆரம்ப நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருப்பதால், அந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது நல்லது. பிரண்டையைத் துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை வாயில்  அசைபோடலாம். இந்தப் பொருட்கள் துர்நாற்றத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதுடன், அஜீரணத்தையும் குணமாக்கும்.''